வவுனியாவில் திருடர்கள் கைவரிசை - பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவில் திருடர்கள் கைவரிசை - பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியா – வைரவபுளியங்குளம் சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்குள் உள்நுளைந்த திருடர்கள் அங்கிருந்து பணத்தையும் பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

வியாபார நிலையங்களை நேற்று இரவு மூடிவிட்டுசென்ற அதன் உரிமையாளர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீண்டும் அதனை திறக்க முற்பட்டபோது கதவினை உடைத்து பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது.

குறித்த சம்பவத்தில் தொடர்பாடல் நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணமும், தொலைபேசி அட்டைகளும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அத்துடன் அதற்கு அருகாமையில் இருந்து வர்ணப்பூச்சு விற்பனை நிலையம் ஒன்றை உடைத்த திருடர்கள் அங்கிருந்த பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

இதேவேளை அதேபகுதியில் அமைந்திருந்த மற்றொரு வியாபார நிலையத்தின் (சலூண்) கதவும் உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொருட்கள் எவையும் திருடப்பவில்லை என்பது குறிப்பிடதக்கது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.