ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இருவர் பலி
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக குறித்த கப்பல் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
ஓமானின் கசாப் நகருக்கு வடகிழக்கே சுமார் 16.6 கடல் மைல் (19 மைல்) தொலைவில், சித்ர் என்ற கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் அடையாளம் தெரியாத எறிகணைகளால் தாக்கப்பட்டதாக, கப்பல் கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையிலேயே அந்த நிறுவனம் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் தேசிய கப்பல் நிறுவனமான பஹ்ரி , இந்தச் சம்பவத்தில் இரண்டு பிலிப்பைன்ஸ் மாலுமிகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது .
ஹோர்முஸ் நீரிணை
இன்று காலை X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பஹ்ரி நிறுவனம் பின்வருமாறு கூறியுள்ளது:

“இந்தக் கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சக ஊழியர்களுக்கும் தனது முழு ஆதரவையும் வழங்கி வருகிறது.” என்றுள்ளது.
பெப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடங்கியதிலிருந்து, ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.