வெப்ப அலையால் தவிக்கும் ஐரோப்பா: பிரான்சில் 40 பேர் பலி!
முழு ஐரோப்பிய பிராந்தியம் முழுவதும் சாதனை படைக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை தாக்கங்களினால், கடந்த சில நாட்களுக்குள் பிரான்சில் மட்டும் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
பிரான்சின் பெரும்பான்மையான மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடுமையான வெப்ப காலநிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உத்தியோகபூர்வ காலநிலை அவதானிப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியஸை ஒட்டியதாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மேற்கு பிரான்சின் சில பகுதிகளில் வெப்பநிலை 43 செல்சியஸ் போன்ற மிக உயர்ந்த அளவு வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என காலநிலை பிரிவினர் மேலும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, பிரான்சின் பல பகுதிகளுக்கு தற்போது 'சிவப்பு எச்சரிக்கை' (Red notice) விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளே இந்த கடுமையான வெப்ப அலையினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாக மாறியுள்ளன.
நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக உடலைக் குளிர்வித்துக் கொள்வதற்காக, பலர் அபாயங்களைப் பொருட்படுத்தாது ஆறுகள் மற்றும் கால்வாய்களில் இறங்கி நீராடுவதற்கு முற்படுகின்றனர்.
ஜெர்மனியின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளிலும் வெப்பநிலை 40 செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அங்குள்ள ரைன் நதியில் நீராடச் சென்ற 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியஸ் வரம்பைத் தாண்டியுள்ளதுடன், கோர்டோபா போன்ற கிராமப்புறப் பகுதிகளில் இது 44 செல்சியஸ் வரை உயரக்கூடும் என அந்நாட்டு காலநிலை பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றங்கள் காரணமாக, ஜூன் மாதத்தில் ஏற்படும் இவ்வாறான வெப்ப அலைகள் தற்போது மிகவும் பொதுவான ஒன்றாக மாறி வருவதாக ஸ்பெயினின் காலநிலை சேவைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கடுமையான வெப்ப அலை வெள்ளிக்கிழமையாகும் போது நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.