இரவுவேளை எரிபொருள் வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்
திருகோணமலை -சேருநுவர காவல்துறை பிரிவிலுள்ள மகிந்தபுர பகுதியில் உள்ள வீதியில் வைத்து யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 56 வயதான கித்சிறி விஜேயபிரியந்த என தெரியவருகிறது.
மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா இன்று வியாழக்கிழமை (26) பார்வையிட்டு விசாரணை செய்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யானை தாக்குதலுக்கு உள்ளான நபர் எரிபொருள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு (25) 10.00 மணி அளவில் சென்றபோது வீதியில் நின்ற யானை அவரை அவ்விடத்தில் வைத்து தாக்கியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.