கடத்தி செல்லப்பட்ட இ.போ.ச பேருந்து; அதிகாரிகள் ஷாக்
பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கடத்தப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கபப்ட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (25) காலை யாரோ ஒருவரால் கடத்தப்பட்டு, தியதலாவ வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட பேருந்து வெல்லவாய டிப்போவைச் சேர்ந்த மாத்தறை-பண்டாரவளை பேருந்து என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட பேருந்து மாத்தறையிலிருந்து பண்டாரவளைக்கு வந்து, வழக்கம் போல் பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மாத்தறை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
இந்நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு பேருந்தைத் தேடி ஓட்டுநர் வந்தபோது, பேருந்து காணாமல் போனதைக் கண்டு பொலிஸாரிடம் புகார் அளித்தார்.
அதன் பின்னர், பேருந்து தியதலாவ வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில், பொலிஸார் பேருந்தை கண்டுபிடித்தனர்.