மின்கட்டண திருத்தம் : இன்று முதல் ஆரம்பமாகும் நடவடிக்கை
2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் பணிகள் இன்று (25) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மின்சார நுகர்வோருக்கு மார்ச் 18 ஆம் திகதி வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 5 இடங்களில் வாய்மூலக் கருத்துகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான முதலாவது அமர்வு மார்ச் 07 அம்பாறையிலும், மார்ச் 11 வவுனியாவில் கருத்துக்கேட்பு அமர்வு நடைபெறும், மார்ச் 12 மாத்தளை மாவட்டத்தில் இடம்பெறும், மார்ச் 16 அம்பாந்தோட்டையில் கருத்துக்களை முன்வைக்க முடியும், மார்ச் 18 இறுதியான வாய்மூல ஆலோசனை அமர்வு நடைபெறவுள்ளது.
பொதுமக்களினால் முன்வைக்கப்படும் அனைத்து முன்மொழிவுகளையும் பரிசீலித்த பின்னரே, மின் கட்டணத் திருத்தம் குறித்த தனது இறுதி முடிவை ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயன்முறையை அரசாங்கம் முறையாக முன்னெடுக்கத் தவறியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (25) எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.