வடக்கு - கிழக்கிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் : கிடைத்தது அனுமதி

வடக்கு - கிழக்கிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் : கிடைத்தது அனுமதி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த யோசனையை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்துள்ளார்.

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நிதியில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் : கிடைத்தது அனுமதி | 100 Mn Usd To Be Provided To The North And East

குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல்வளங்களை (சுற்றுலா, மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அமைச்சு தனது ஏனைய ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்காக யோசனை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.