சட்டவிரோத மதுபானத்தால் பறிபோன உயிர்கள் ; பிரதான சந்தேக நபர் கைது
சட்டவிரோத மதுபானம் அருந்தி 06 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று (07) வென்னப்புவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவை பகுதியில் கடந்த 6ஆம் திகதி, சட்டவிரோத மதுபானம் அருந்தி 06 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வென்னப்புவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை விசாரணை அதிகாரிகள் கைது செய்து நேற்று (07) மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது,இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலவத்த, கிழக்கு பண்டிரிபுவ பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சிலாபம் வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி, மதுஅருந்தியமையால் குறித்த நபர்களில் ஐவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மற்றுமொருவரின் பிரேத பரிசோதனை இன்று (08) சிலாபம் வைத்தியசாலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டவிரோத மது அருந்தியதால் சுகவீனமடைந்த மேலும் 08 பேர் நீர்கொழும்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வென்னப்புவை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன