ஆறாம் வகுப்பு பாடப்புத்தக சர்ச்சை! சிஐடிக்கு அழைக்கப்பட்ட கல்வி அதிகாரிகள்
ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தளத்தைச் சேர்த்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தின் மூன்று அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய வலைத்தளத்தை தொகுதியில் சேர்ப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிகாரியும் நேற்று(05.01) அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் கடந்த வாரம் கல்வி நிறுவகத்திற்கு சென்று அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றதாக தெரியவருகிறது.
இதற்கிடையில், ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட வலைத்தளத்தைச் சேர்ப்பதற்கு யார் பொறுப்பு என்பதைக் குறிப்பிடும் அறிக்கையை தேசிய கல்வி நிறுவகம் நேற்று (05) கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவாவிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கை அதே நிறுவனத்தின் மூன்று பேர் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செயலாளரின் அறிக்கையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததன் பேரில், பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகிய பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரணவால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
மேலும், இந்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட வலைத்தளம் தொகுதியில் சேர்க்கப்பட்ட செயல்முறை மற்றும் அதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், மேற்படி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியின் கடமைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் சந்திமா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.