யாழில் இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த துயரம்! கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள்
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளது.
குறித்த துயர சம்பவம் நேற்று (20.11.2025) யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இளவாலை பகுதியைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகளில், பெண் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது.

இந்நிலையில், ஆண் குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்டதை அடுத்து குழந்தை மயக்கமடைந்துள்ளது.
உடனடியாக குழந்தை சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.