
யாழ்.சண்டிலிப்பாயில் முச்சக்கர வண்டி , மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.
சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் 13.10.2025 திங்கட்கிழமை , முகமூடிகள் அணிந்தவாறு நால்வர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று நுழைந்து வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து தப்பி சென்று இருந்தது.
பின்னர் கொள்ளையடித்து சென்ற மோட்டார் சைக்கிளை வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மாசியப்பிட்டி சந்திக்கு அருகில் நடு வீதியில் வைத்து தீ மூட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.