இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவரும் வேலைத்திட்டம் இன்று முதல்..!
கொரோனா வைரஸ் உலகப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவரும் வேலைத்திட்டம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.
வெளிவிவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
இந்தியா, டுபாய், மாலைதீவு, சீனா முதலான நாடுகளில் இருந்து இன்றைய தினம் இலங்கையர்கள் நாடுதிரும்ப உள்ளனர்.
இன்று டுபாயிலிருந்து 440 பேரும், சீனாவில் இருந்து இராணுவ உத்தியோகத்தர்கள் உட்பட 108 பேரும் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அதேபோன்று மலைத்தீவில் இருந்து 200 பேர் வரையிலும், இந்தியாவின் விசாகப்பட்டிணத்தில் இருந்து மேலும் 164 பேரும் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இதற்கமைய நான்கு குழுக்கள் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 839 ஆக உள்ளது.
இந்த நிலையில், இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களிக் எண்ணிக்கை 252 ஆக குறைவடைந்துள்ளது.
இதேநேரம், இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் தனிமைப்பத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 68 பேர் இன்றைய தினம் வீடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேநேரம், இராணுத்தினரால் முன்னெடுக்கப்படும் 33 தணிமைப்படுத்தல் மையங்களில் ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.