
இலங்கையில் தங்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு - 3 இலட்சம் பேர் ஆபத்தில்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனை அளவைத் தாண்டியுள்ள நிலையில், இலங்கையில் உள்ளூர் தங்கச் சந்தை சடுதியாக வீழ்ச்சி அடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக மூன்று லட்சம் பேருடைய வேலைகள் ஆபத்தில் இருப்பதாக அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் பாலசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
“உலகளவில் தங்க விலை அதிகரிப்பால் உள்ளூர் தங்கத்தின் தேவை 50 சதவீதத்திற்கு அதிகமாகக் குறைய வாய்ப்புள்ளது.
இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், பல நகைக்கடைக்காரர்கள் தங்கள் பணியாளர்களைக் குறைக்க வேண்டியிருக்கும்.
கொள்வனவாளர்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால், தற்போதைய பணியாளர்களைப் பராமரிக்க எந்த நியாயமான காரணமும் இல்லை. எனவே, ஆட்குறைப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.
இலங்கையின் மிகப்பெரிய பாரம்பரிய வர்த்தகங்களில் ஒன்றான நகைத் தொழில், ஏற்கனவே சுமார் 300,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது.
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையே 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வுக்கு காரணமாகும்.
இதுபோன்ற சமயங்களில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடுகிறார்கள். தங்கம் மிகவும் நம்பகமான சொத்துக்களில் ஒன்றாகும்.
தங்கத்திற்கான உலகளாவிய தேவை அதிகரிப்பே இந்த சாதனை விலை உயர்வுக்கு முக்கிய காரணம்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.