
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன (A.H.M.H. Abayarathna) தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டமானது அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் நேற்றையதினம் (27) யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர், யாழ். மாவட்டத்தில் இயற்கை வளங்கள் உள்ளதாகவும், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது நிலவசதி பற்றாக்குறையாகவுள்ளதாகவும், இருக்கின்ற நில வளங்களை திறமையாக பயன்டுத்த வேண்டும் எனவும், உற்பத்தி திறன் மூலம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பதவி நிலை உத்தியோகத்தர்கள், சாரதிகள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட வகையில் அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அபிவிருத்தித் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் முழுமையாக பயன்படுத்துவதனை சவாலாக ஏற்றுச் செயற்படுமாறும் தெரிவித்து, இனம், மதம், மொழி கடந்து சகோதரத்துவத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளார்.