ரயிலில் பயணித்துக்கொண்டே இலங்கையின் அழகை ரசிக்கலாம்; ஆரம்பமானது 'கலிப்சோ' சேவை

ரயிலில் பயணித்துக்கொண்டே இலங்கையின் அழகை ரசிக்கலாம்; ஆரம்பமானது 'கலிப்சோ' சேவை

"கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட  ரயில் சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை  ரயில் நிலையங்களுக்கு இடையே 08.04.2025 முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த  ரயில் அதன் பயணத்தை ஒவ்வொரு  செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து ஆரம்பிக்கும்.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த ரயில் சேவை நானுஓயா ரயில் நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி  பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுவதுடன்,

இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 

மேலும்இந்த ரயில், உணவு, இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது. 

தற்போது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையக தொடருந்து பாதையின் அதிசயங்களை பார்த்து இரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளனர். 

இதன் காரணமாகவே இந்த ரயில் சேவையை ஆரம்பித்ததாகவும், தெமோதரை வரை இயங்கும் ரயில் மீண்டும் பண்டாரவளை வரையிலும், பின்னர் தெமோதரையிலிருந்து  பதுளை வரையிலும் இயக்கப்படும் என்றும்  இந்த ரயிலில் பயணித்த ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்தார். 

மேலும், விரைவில் மேலதிகமாக "கலிப்சோ" ரயில்களை சேவையில் இணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.