உச்சம் தொட்ட தேங்காய் விலைக்கு விரைவில் தீர்வு : அரச தரப்பு தகவல்
நாட்டில் தற்போது தேங்காயின் விலையானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுப்பட்டுள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (25.02.2025) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் தேங்காய் பிரச்சினையை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஊடாக சதோச நிறுவனத்திடம் ஒப்படைத்து மக்களுக்கு சாதாரண விலைக்கு தேங்காயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகளின் பிரச்சினை, உர பற்றாக்குறை மற்றும் காலநிலை காரணமாக அதிக அளவில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
மேலும் தற்போதைய தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக கம்பஹா மாவட்டத்தில் 2.5 மில்லியன் தென்னங்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த சிறப்பு தேங்காய் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.