குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: கல்முனை ஆதார வைத்தியசாலையில் குழப்பம்

குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: கல்முனை ஆதார வைத்தியசாலையில் குழப்பம்

குழந்தை பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தமை தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (சனிக்கிழமை) மதியம் ஒன்றுகூடிய உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வைத்தியர் அசமந்தப்போக்காக செயற்பட்டதாகவும் நீதியைப் பெற்றுத்தரக் கோரியும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

நேற்று வெல்லாவெளி பாக்கியல்ல சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதான மாசிலாமணி சிவராணி என்பவர் குழந்தை பேறுக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குழந்தைப் பேறுக்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து குழந்தையை பிரசவித்த தாய்க்கு திடிரென ஏற்பட்ட உடல்நலக்குறைவினை அடுத்து மீண்டும் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த சிகிச்சையினாலேயே தாய் இறந்ததாக உறவினர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, வைத்தியசாலையின் முன்னால் அமைதியின்மையை ஏற்படுத்திய சந்தேகத்தின்பேரில் ஐவர் கல்முனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தாய்க்கு 3 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.