நான்கு பல்கலைகழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!
பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் நான்கு சிரேஷ்ட மாணவர்களின் கல்வியை இடைநிறுத்துவதற்கு பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி இரவு முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கியிருந்த அக்பர் விடுதிக்குள் நுழைந்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த இரு மாணவர்களும் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பாதிக்கபப்ட்ட மாணவனின் காது ஒன்று பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாக்குதலை நடத்திய 4 மாணவர்களும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்றுத் துறை இந்த நான்கு மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்தி முடிவெடுக்கும் வரை மாணவர்களின் கல்வி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசேட விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.