அமெரிக்காவில் பணியாற்ற விரும்புவோருக்கு பேரிடியாக வந்த மற்றுமொரு செய்தி!

அமெரிக்காவில் பணியாற்ற விரும்புவோருக்கு பேரிடியாக வந்த மற்றுமொரு செய்தி!

அமெரிக்காவில் பணியாற்ற வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் -- 1பி' உள்ளிட்ட இதர வேலை வாய்ப்பு விசாக்கள் பெறுவதில், துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகளை தவிர்ப்பதற்காக, தேர்வு முறை கடுமையாக்கப்பட்டுள்ளது' என, அந்நாட்டு குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, அமெரிக்க குடியேற்ற சேவைகளுக்கான துணை இயக்குனர் ஜோசப் எட்லோ தெரிவிக்கையில்,

“எச் -- 1பி விசா வழங்க வசூலிக்கப்படும் கட்டணங்கள், அமெரிக்க தொழிலாளர்களை பயிற்றுவிக்க பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

இந்த விசாவுக்கான தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

உள்நாட்டு பல்கலைக்கழகங்களில், முதுகலை அல்லது அதற்கு நிகரான மேற்படிப்பு முடித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டில், 65 ஆயிரம், எச் -- 1பி விசாக்கள் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதில், முதல், 20 ஆயிரம் விசாக்கள், அமெரிக்க பல்கலையில், உயர் படிப்பு முடித்தவர்களுக்கு வழங்க, முன்னுரிமை அளிக்கப்படும்.

நீதித் துறையுடன் இணைந்து, போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைவாய்ப்பு விசாக்கள் பெறுவதில், துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

மென்பொருள் இன்ஜினியர்கள் உள்ளிட்ட, தனிச்சிறப்பு வாய்ந்த துறை நிபுணர்கள், அமெரிக்கா சென்று பணியாற்ற, எச் - -1பி விசா வழங்கப்படுகிறது.

'அமெரிக்காவில், 'கொரோனா' வைரஸ் பரவலால், கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

'அவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வேலை பார்க்க வருவோருக்கான விசாக்கள், இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படும்' என, அமெரிக்க அரசு, சமீபத்தில் கூறியிருந்தது.

இந்த செய்தி அமெரிக்கா செல்ல விரும்பியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேர்வு முறை கடுமையாக்கப்பட்டுள்ளது' என்பது மற்றுமொரு பேரிடியாக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.