வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
அரச அதிகாரிகளுக்கோ அல்லது வேறு எவருக்குமோ வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யவோ அல்லது அவற்றுக்கான அந்நிய செலாவணியை ஒதுக்கவோ அனுமதி வழங்க முடிவு செய்யவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தினை அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், விரிவான ஆய்வுகளுக்குப் பின்னரே வாகன இறக்குமதிக்கான வரம்புகளைத் தளர்த்தப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதிய (International Monetary Fund) ஒப்பந்தத்தின் படி, பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகள் மற்றும் முன்நிபந்தனைகள் உள்ளன. அதன்படி,வெளிநாட்டு கையிருப்பை குறைக்கும் விடயங்களில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது.
இந்தநிலையில், குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு நடைமுறையொன்றை உருவாக்குவதற்கு விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, எந்தவொரு முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 2025 முதல் வாகன இறக்குமதியில் இருக்கும் வரம்புகளை தளர்த்தும் விருப்பத்தை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.