குளத்தில் காணாமல்போன குடும்பஸ்தரை தேடும் பணி தீவிரம்!

குளத்தில் காணாமல்போன குடும்பஸ்தரை தேடும் பணி தீவிரம்!

குளத்தில் தமரைப்பூ பறிக்க இருவர் தோணியில் சென்ற போது தோணி கவிழ்ந்து வீழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்திஆயா பகுதியில் இன்று புதன்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் திருப்பெருந்துறை 5ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சத்தியா (34 வயது) என்பவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த அவருடைய நண்பன் எஸ்.சுமன் என்பவருடன் திருப்பெருந்துறை காளி கோவில் உற்சவத்திற்கு தாமரைப்பூ பறிப்பதற்காக காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.

ரிதிதென்னை ஜெயந்திஆயா குளத்தில் தோணி ஒன்றில் தாமரைப்பூ பறிக்க குளத்தின் நடுப்பகுதிக்கு சென்ற நிலையில் தோணி கவிழ்ந்ததுள்ளது. இதனால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதன் போது சுமன் நீந்தி கரைசேர்ந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நீரில் மூழ்கிய நண்பனை தேடியபோதும் அவர் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.