ஆதரவாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! வேட்பாளர் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கை!
வவுனியா சாளம்பைக்குளத்தில் நேற்று முந்தினம் இரவு ஒரு அரசியல்வாதியின் எடுபிடிகளான காடையர்கள் குழுவொன்று எனது ஆதரவாளர்களான அப்பாவி மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது,
தமக்கு ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலைமையினை ஜீரணிக்க முடியாத காடையர்களின் இழிவானதும் கோழைத்தனமானதுமான தாக்குதல்களால் தமது எழுச்சியை அடக்கி விட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலால் பல வாகனங்கள் சேதமுற்றதுடன் பல அப்பாவிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாட்டினால் அவர்கள் எதனைச் சாதிக்க நினைக்கின்றனர். தாம் சுகபோகமாக வாழ்வதற்காக அப்பாவிகளை தாக்குவது மனித நேயமற்றதும் கொடூரமானதாகவுமுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த காலங்களிலும் இவ்வாறே மாற்றுக்கட்சியினரை பழிவாங்கும் பாசிசம் வன்னியில் தாண்டவமாடியது. அது இன்னும் தொடர்வது தான் வேதனையாக உள்ளது.
எம்மைப் பொறுத்தவரை இந்த சீண்டல்களுக்கும் ரௌடித்தனங்களுக்கும் நாம் பயந்தது கிடையாது.
ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்க முனைபவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களது இந்த காடைத்தனங்களால் எமது பயணம் இன்னும் வீரியத்துடன் வேகமெடுக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறித்த தாக்குதல் சம்பவத்தை நான் வண்மையாக கண்டிப்பதோடு வன்முறையில் ஈடுபடுவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.