
பேராதனை பல்கலை தமிழ் மாணவனின் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு.
பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்த திவின் சாகித்தியன் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் முருங்கன் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய எஸ்.திவின் சாகித்தியன் என்ற மாணவரே கடந்த 22 ஆம் திகதி திடீரென உயிரிழந்திருந்தார்.
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர் பேராதனை வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் பிரபாத் சேனசிங்க தலைமையில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்த இளைஞனின் உடல் உறுப்புகளை பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய பீடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் பேராதனை பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மேலும் இரு மாணவர்களுடன் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது கடந்த 22 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் விடுதியில் இருந்த போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.