தென்பகுதியில் மற்றுமொரு துப்பாக்கிசூடு..!
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான நபர் ஒருவரே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அண்மைக்காலமாக தென்பகுதியில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பலாந்தோட்டை மடயமலலந்த பிரதேசத்தில் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் நேற்று (09) பிற்பகல் ஹம்பாந்தோட்டை துறைமுக காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவில்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (10) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.