நெடுந்தீவில் கைதான 9 இந்திய கடற்தொழிலாளர்கள் - நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு!!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலார்கள் 09 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த கடற்தொழிலார்கள் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் மீனவர்கள் 09 பேரும் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையின் கீழ் 09 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவைமடி பயன்பாடு, கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி இலங்கை கடலில் தொழிலில் ஈடுபட்டமை, அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளில் இரு படகுகளுக்கான உரிமை கோரிக்கை வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விடுதலை செய்யப்பட்ட கடற்தொழிலார்களை மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.