யாழில் தனியார் கல்வி நிறுவன விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்...
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளி மற்றும் ஞாயிறுக் கிழமைகளுக்கான விடுமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழில் தரம் 9 வரையான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் இத்திட்டம் இன்றிலிருந்து (02.07.2023) நடைமுறையாகின்றது எனவும் இது தொடர்பில் பிரதேச செயலர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ். மாவட்ட செயலகத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் கல்வி நிறுவனங்களை விடுமுறைநாளாக கடைப்பிடிக்க வேண்டும்.
இது குறித்து கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் முகமாக யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்தும் பிரதேச செயலர்கள் ஊடாக 200 தனியார் கல்வி நிறுவனங்களும், 200 குழு வகுப்புக்களை நடத்துகின்ற இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதேச செயலர்கள் மூலம் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
மாணவர்களின் எதிர்கால மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த விசேட நடைமுறையை மனிதாபிமான அடிப்படையில் அனைத்து கல்வி நிறுவன, குழு வகுப்புக்களை நடத்தும் உரிமையாளர்களும் கவனத்தில்கொண்டு இன்று முதல் செயற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.