
பொலிஸாரிடம் இருந்து தப்பிய முச்சக்கரவண்டி சாரதி சடலமாக மீட்பு..!
பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலி - கராபிட்டிய பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனா்.
குறித்த முச்சக்கரவண்டி சாரதி இன்று (24.06.2023) காலை பியதிகம பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு அருகில் தொடருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காலியில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த தொடருந்தில் தலையை வைத்து அவா் தற்கொலை செய்து கொண்டார் என்று தொிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 31 வயதுடையவர் எனவும், ஹபுகல - வக்வெல்ல பிரதேசத்தைச் சோ்ந்தவா் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார்.
கடந்த 22 ஆம் திகதி காலி கராபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர். எவ்வாறாயினும், முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் அதிலிருந்து தப்பிச் சென்றிருந்தனா்.
அதன்போது தப்பிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியே இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.