
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: வட மாகாண கடற்படை உயர் அதிகாரியிடம் விவாதம்..!
வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரியிடம் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறல் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (31.05.2023) இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இவ்வாறு விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் வட மாகாண கடற்படை உயர் அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
ஒரு சிலபடகுகளில் இந்திய மீனவர்கள் வந்தால் அதனை கட்டுப்படுத்தலாம் ஆனால் அதிகளவில் வருவதனால் எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதாவது அந்த கட்டுப்படுத்துவதற்குரிய பூரணமான வளங்கள் எங்களிடம் இல்லை குறிப்பாக ஆளணி உபகரணங்கள் எங்களிடம் இல்லை. எனவே அதனை ஒரு ராஜதந்திர முறையில் கட்டுப்படுத்துவதுதான் சிறந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அங்கஜன் இராமநாதன் கூறியதாவது,
உங்களிடம் ஆளணி இல்லை என்றால் ஏன் அதனை ஏற்கனவே தெரியப்படுத்தவில்லை? கடற்படை உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு உங்களுடைய செயற்பாடு உள்ளது.
வேறு நாட்டின் படகு உள்ளே வருகின்றது என்றால் தேசிய பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பதை நாங்கள் பார்க்க முடிகின்றது எனவேகுறித்த விடயம் தொடர்பில் அடுத்த கூட்டத்திற்கு வரும்போது இந்த இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையால் என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.
மேலும் கடற்படை உயர் அதிகாரி தெரிவிக்கையில்
நமது கடற்பிரதேசமானமானது பெரிய பிரதேசம் அந்த பிரதேசம் முழுவதிலும் கடற்படை செயற்படுகின்றது.
எனினும் எம்மால் முயன்றவரை நாங்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துகின்றோம். குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் 12ஆயிரம் கிலோ கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளோம்.
அதேபோல் போதைப் பொருள் விநியோகம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்,
வரவு செலவுத் திட்டத்தில் 20 வீதமான நிதி பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. ஆனால் பிறிதொரு நாட்டு படகுகள் எமது நாட்டுக்குள் வருகை தருவதினை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் நீங்கள் தேசிய பாதுகாப்பினை செயற்படுத்தவில்லை.
மேற்கூறிய விடயத்திற்கு பதிலளிக்கும் முகமாக கடற்படை அதிகாரி கூறியதாவது,
இந்திய மீனவர்களை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த நாங்கள் இன்று வரை முயற்சிக்கவில்லை. மனிதாபிமானமாக செயற்படுகின்றோம்.
அதாவது மீன்பிடி தொழிலாளர்களாகவே பார்க்கின்றோம் எனவே கடற்படை தேசிய பாதுகாப்பினை செயற்படுத்தவில்லை என நீங்கள் கருத வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடற் படையானது தேசிய பாதுகாப்பினை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால், இந்திய படகுகளை கட்டுப்படுத்தும் விடயத்தில் ஏன் தயங்குகிறார்கள் என்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.