'லவ் டுடே' பாணியில் செல்போனை மாற்றிய மணமகள்.. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மணமகன்!

'லவ் டுடே' பாணியில் செல்போனை மாற்றிய மணமகள்.. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மணமகன்!

’லவ் டுடே’ பாணியில் மணமகனின் செல்போனை வாங்கி பார்த்த மணமகள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மணமகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான ’லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் காதலர்கள் இருவரும் செல்போனை மாற்றிக்கொண்டு ஒருநாள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நாயகியின் தந்தை விதிப்பார் என்பதும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்பதும் தெரிந்ததே. மிகவும் சுவராசியமாக ரசிக்க வைக்கும் திரைக்கதையுடன் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ’லவ் டுடே’ பாணியில் சமீபத்தில் திருமணம் நிச்சயமான வேலூர் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த பெண் ஒருவர், தனது வருங்கால கணவர் அரவிந்த் செல்போனை வாங்கி பார்த்து உள்ளார். அப்போது அந்த செல்போனில் ஒரு சிறுமியின் அந்தரங்க வீடியோ இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் அவர் அந்த போனை அரவிந்த் இடம் கொடுத்துவிட்டு ரகசியமாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விசாரணையில் செல்போனில் இருந்த 15 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அரவிந்த் சில அந்தரங்க வீடியோக்களை எடுத்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரவிந்த் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.