ஐதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் காயம்

ஐதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் காயம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும் போது வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் காயம் ஏற்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கை பெருவிரலுக்கும், அதற்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 லீக் ஆட்டங்களை தவற விட்டு அணிக்கு திரும்பினார். இந்த நிலையில் புனேயில் நேற்று முன்தினம் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும் போது அதே கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த ஆட்டத்தில் பந்து வீசவில்லை.

வாஷிங்டன் சுந்தர் காயம் குறித்து ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கருத்து தெரிவிக்கையில், ‘வாஷிங்டன் சுந்தர் காயத்துக்கு தையல் போட வேண்டியது இருப்பதால் அவர் டெல்லிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் (வருகிற 5-ந் தேதி) விளையாடுவது சந்தேகம் தான். எங்களது முக்கிய பவுலர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக பந்து வீச முடியாமல் போனது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது’ என்றார்.