ஐ.பி.எல்: 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி

ஐ.பி.எல்: 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி

குஜராத் அணியின் துவக்க வீரர் ஷுப்மான் கில் 46 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டம் புனேயில் இன்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. 

 

 

இதனையடுத்து களம் இறங்கிய குஜராத் துவக்க வீரர் மேத்யூ வேட், ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க வீரர் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்து முன்னேறினார். 

 

மறுமுனையில் விஜய் சங்கர் 13 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள் சேர்த்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 

 

ராகுல் தெவாட்டியா 14 ரன்களிலும், அபினவ் மனோகர் ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்ப, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. 

 

டெல்லி தரப்பில் முஷ்பிகுர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார். கலீல் அகமது 2  விக்கெட், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தனர். 

 

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா 10 ரன்களுடனும்,  டிம் சீபர்ட் 3 ரன்களுடன் வெளியேறினர். 

 

அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 43 ரன்கள் அடித்தார். அந்த அணி 20  ஓவர்கள் முடிவில்  9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 

 

இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.  அந்த அணி சார்பில் லோக்கி பெர்குசன் அதிகபட்சமாக 4 விக்கெட்களையும் முகமது சமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.