முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதும், முதலீட்டாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு முதலீடு இந்த நாட்டுக்கு இன்றியமையாதது. நாம் எதிர்நோக்கும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட வேண்டும். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, முதவீட்டாளர்கள் மிகக் குறைந்தளவு வருகை தரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது. அந்த நிலை மாற்றப்பட வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியாவிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரான கௌதம் அதானியை சந்தித்தமை தொடர்பாகவும், அவர் கொழும்பு துறைமுக மேற்கு முனையம் குறித்து கலந்துரையாட வந்ததாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பிலும், அவரின் இந்தப் பயணத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்தும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த பயணம் அவரது தனிப்பட்ட வருகை. நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அதானி நிறுவனம் விசாரித்து வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்தில் முதலீடு செய்வதில் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அது உட்பட இலங்கையின் ஏனைய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விசாரிக்க அவர்கள் இலங்கை வந்திருக்கலாம். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்