கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார்: காவிரி தொடர்பாக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு மெத்தனத்தோடும் மிதப்போடும் செயல்பட்டு வருகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தினமும் உயர்நிலைக் கூட்டங்களைக் கூட்டி வருகிறார். டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களைச் சந்திக்கிறார். முன்னாள் முதலமைச்சர்கள், கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் அறிவித்திருக்கிறார்.
தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு
ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு மெத்தனத்தோடும் மிதப்போடும் செயல்பட்டு வருகிறது. கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார் ஒருபடி மேலே சென்று த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது போல கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். காவிரி நடுவர் மன்றம் கண்ட தலைவர் கலைஞர் குறித்தும் அவதூறாகப் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜயோ, நீர்வளத்துறைக்கு அமைச்சரான ஆனந்தோ மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் குறித்த நிர்மல் குமாரின் கருத்தையும், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனும் அவரது நிலைப்பாட்டையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
முதலமைச்சர் விஜயின் நிலைப்பாடு என்ன?
ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது. மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எல்லாவற்றிலும் வாய்மூடியே இருப்பது தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல, இங்குள்ள ஆளுநரும் நமது மாநில அரசைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவதற்கே இது வழிவகுக்கும்.
மாநிலத்தின் உயிர்ப் பிரச்சினைகளில் கூட யாரையும் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் உறக்கத்தில் இருப்பதும், வார இறுதி நாட்களில் Complete Rest Mode-க்குச் சென்று விடுவதும் காவிரி விவசாயிகளைக் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நமது முதலமைச்சரையும் அரசையும் நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. மழை பெய்து கர்நாடகம் தானாகத் தண்ணீர் திறந்துவிட்டால்தான் உண்டு எனும் அளவுக்கு அவநம்பிக்கையில் அவர்களைத் த.வெ.க. அரசு தள்ளுவது கடும் கண்டனத்துக்குரியது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும். தான்தோன்றித்தனமாகப் பேசியுள்ள அமைச்சர் நிர்மல் குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். காவிரிப் பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும் ஆலோசனைகள் கூறவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன.
மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதைத் த.வெ.க. அரசு இனியேனும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ரகுபதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.