மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் - கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் இந்திய படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மேற்படி கடற்பரப்பில் கடந்த தினம், சில இந்திய படகுகள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது, இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்த ஒருவர் காணாமல்போனதுடன், மேலும் இரண்டு பேர் மீட்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து, காணாமல்போன தமிழக மீனவரைத் தேடும் பணிகளைக் கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, குறித்த தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் நீண்டகாலமாகத் தொடர்ந்து நிகழ்வதால், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வெளிவிவகார அமைச்சரிடம் அவர் கோரியுள்ளார்.