5 மாவட்டங்களில் 20 - 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி

5 மாவட்டங்களில் 20 - 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 20 தொடக்கம் 30 வயதிற்கு உள்பட்ட அனைவருக்கும், செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி செவ்வாய் கிழமை முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் : தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியினால் வெளியிடப்படும். அவ்வாறு அறிவிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும்.

20 தொடக்கம் 30 வயதிற்கு உள்பட்டவர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைகளிலும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.