யாழில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

யாழில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தின் வைத்திய பிரிவினால் நடமாடும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (19) யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்றைய தினம் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகர் பகுதிகளை உள்ளடக்கி இந்த வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது. யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் போது தடுப்பூசியினை பெறாதோர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுங்கள் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்கு அறிவுறுத்தினார்.

தற்போது மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. தடுப்பூசியினை பெற விருப்பம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு நிலைமை வேண்டாம் நாடு பூராகவும் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தடுப்பூசியினை கட்டாயமாக பெற வேண்டும் என்றும் இராணுவ கட்டளைத் தளபதி வலியுறுத்தினார்.

கடந்த காலத்தில் தடுப்பூசி தொடர்பில் பயத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் இனி அந்த பயத்தை தவிர்த்து தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுங்கள். நாடு பூராகவும் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு விடயத்தினை கூற விரும்புகின்றேன். சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள். ஊடகங்களில் வெளிவரும் சுகாதார நடைமுறைகள் அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுங்கள், ஒன்றுகூடல்களை தவிருங்கள்.

தற்போதைய நிலையில் மாகாணங்களுக்கிடையில் சுகாதார நடைமுறைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ் சேவைகளை நிறுத்துவதற்கு பொலிசாருடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.