யாழ். அரசாங்க அதிபராக தமிழ் பேச தெரியாதவரை நியமிக்க முனைவது ஜனநாயகத்திற்கு விரோதமானது!

யாழ். அரசாங்க அதிபராக தமிழ் பேச தெரியாதவரை நியமிக்க முனைவது ஜனநாயகத்திற்கு விரோதமானது!

தமிழ் பேச தெரியாத ஒருவரை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க முனைவது பொருத்தமற்ற ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மிகவிரைவில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 95 சதவீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர்.

அத்துடன், 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை சார்ந்தவர்களாவர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் பட்சத்திலே வாய்மூல மற்றும் எழுத்துமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வினை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் ;இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவினையும் மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

எனவே அத்தகைய நியனமத்தை மீளாய்வு செய்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்திறனும் கொண்ட தமிழ்பேசும் ஒருவரை நியமிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.