பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த பொதுமக்களின் ஆதரவு தேவை!

பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த பொதுமக்களின் ஆதரவு தேவை!

பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தால் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனூடாக தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாத்து கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினருக்கு ஆதரவு அளிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ​அவர் தெரிவித்தார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 22,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேலும், பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.