கற்பாறையுடன் மோதிய முச்சக்கரவண்டி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வான் ஒன்று, கொட்டகலை பகுதியிலிருந்து கொமர்ஷல் பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வான், முச்சக்கரவண்டியுடன் மோதிய பின், முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கற்பாறையுடன் மோதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான் சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
