
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விமான சேவையும் நிறுத்தப்பட்டது. அதன்பின் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறையுடன் மே மாதம் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது. நவம்பர் மாதம் கொரோனா தொற்று வெகுவாக குறைய 70-ல் இருந்து 80 சதவீத இருக்கைகளுடன் உள்நாட்டு விமானங்கள் பறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
தற்போது இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. விமான மூலம் வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என மாநிலங்கள் அறிவித்துள்ளன.
இதனால் விமானங்களில் பயணிகள் பயணம் செய்வது வெகுவாக குறைந்துள்ளது. ஆகவே, கொரோனா அதிகரித்த போதிலும், விமான நிறுவனங்களின் இழப்பை சரிகட்ட கடந்த 19-ந்தேதி 80 சதவீத இருக்கைகளுடன் விமானங்கள் பறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
என்றாலும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் 80 சதவீதம் என்ற நடைமுறையை மே 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.