மாரத்தான் போட்டியில் மனிதர்களை முந்திய ரோபோக்கள்

மாரத்தான் போட்டியில் மனிதர்களை முந்திய ரோபோக்கள்

உலகின் முதல் முறையாக, மனித உருவம் கொண்ட 'ஹியூமனாய்டு' (Humanoid) ரோபோக்கள், தொழில்முறை தடகள வீரர்களை விட வேகமாக ஓடி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளன. பெய்ஜிங்கில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் இந்த வியத்தகு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

பெய்ஜிங் ஈ-டவுன் (Beijing E-Town) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று நடைபெற்ற இந்த அரை மாரத்தான் போட்டியில், சுமார் 12,000 மனித ஓட்டப்பந்தய வீரர்களுடன் 100-க்கும் மேற்பட்ட ஹியூமனாய்டு ரோபோக்கள் பங்கேற்றன.

இதில், சீனத் தொழில்நுட்ப நிறுவனமான 'ஆனர்' (Honor) தயாரித்த 'லைட்னிங்' (Lightning) என்ற ரோபோ, 21.1 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 50 நிமிடங்கள் 26 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தது. இது உகாண்டா வீரர் ஜேக்கப் கிப்லிமோ (Jacob Kiplimo) படைத்த தற்போதைய மனித உலக சாதனையான 57 நிமிடங்கள் 20 வினாடிகளை விட சுமார் 7 நிமிடங்கள் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனர் (Honor) நிறுவனத்தின் ஆதிக்கம்

இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் 'ஆனர்' நிறுவனத்தின் ரோபோக்களே தட்டிச் சென்றன. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த ரோபோக்கள் முறையே 51 மற்றும் 53 நிமிடங்களில் இலக்கை அடைந்தன. இந்த ரோபோக்கள் ஓடும்போது ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட திரவக் குளிர்ச்சி தொழில்நுட்பம் (Liquid Cooling Technology) பயன்படுத்தப்பட்டிருந்தது.

சுயமாக இயங்கிய ரோபோக்கள்

2025-ம் ஆண்டு நடைபெற்ற முதல் போட்டியில் ரோபோக்கள் அனைத்தும் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு நடந்த போட்டியில் சுமார் 40 சதவீத ரோபோக்கள், அவற்றின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பாதையைச் சுயமாகக் கண்டறிந்து (Autonomous) ஓடின.

தொழில்நுட்ப ரகசியம்

இது குறித்துப் பொறியாளர் து சியாவோடி (Du Xiaodi) கூறுகையில், "வெற்றி பெற்ற ரோபோ ஒரு வருடக் கால உழைப்பில் உருவானது. சிறந்த ஓட்டப்பந்தய வீரர்களின் உடல்வாகைப் பிரதிபலிக்கும் வகையில், 90 முதல் 95 செ.மீ நீளமுள்ள கால்களுடன் இது வடிவமைக்கப்பட்டது. ரோபோக்கள் வேகமாக ஓடுவது என்பது வெறும் சாதனைக்காக மட்டுமல்ல; இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நம்பகமான இயந்திரக் கட்டமைப்புகள் மற்றும் குளிர்ச்சித் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றை தொழிற்சாலைகளில் பயன்படுத்தவும் உதவும்," எனத் தெரிவித்தார்.