கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் இன்றும் இடம்பெறவுள்ளன.
குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று மூன்றாவது நாளாகவும் உயர்நீதிமன்றில் இடம்பெற்றன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணை இடம்பெற்றது.
நேற்று இடையீட்டு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இந்தநிலையில், மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் இன்று முற்பகல் 9.30 அளவில் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்த மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சட்டமூலத்திற்கு எதிராக 19 மனுக்களும் 13 இடையீட்டு மனுக்களும் இதுவரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய இன்று மேலும் மூன்று இடையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது