யாழின் பல பகுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் கண்டறிவு

யாழின் பல பகுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் கண்டறிவு

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் இருவர் கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் 778 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் 22 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 7 பேரின் மாதிரிகள் நேற்றைய பரிசோதனையில் முடிவைக் கண்டறிய முடியவில்லை என அறிக்கையிடப்பட்டது. அவர்களிடம் இன்று மீளவும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது அதில் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகளிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளிகளில் திருநெல்வேலி சந்தையில் பணியாற்றும் மூவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மூவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்றவர்கள்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொறியியலாளர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைக்கும் இன்று தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்