
போயஸ் கார்டன் சென்ற சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சென்னை தி.நகரில் தங்கி இருக்கும் சசிகலா ஜெயலலிதாவின் நினைவு இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அவர் இதுவரை அங்கு செல்லவில்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வந்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்ட சசிகலா திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோவிலில் யாகம் செய்தும் வழிபட்டார்.
கடந்த 19-ந் தேதி சென்னை திரும்பிய சசிகலா திடீரென நேற்று காலை 6 மணியளவில் போயஸ் கார்டனுக்கு சென்றார். ஜெயலலிதாவின் வீட்டு வாசல் அருகே ஒரு விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவில் முன்பு காரை விட்டு இறங்கி விநாயகரை தரிசித்தார்.
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் தற்போது அரசு உடமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்பட்ட பிறகு இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்பதால் சசிகலா அங்கு செல்லவில்லை. அந்த வீட்டை பார்த்தபடி சாமி தரிசனம் செய்தார்.
ஜெயலலிதா எப்போது வெளியே சென்று திரும்பினாலும் அந்த கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர் செல்வது வழக்கம். அந்த வகையில் சசிகலாவும் அவருடன் அப்போது சாமி கும்பிடுவார்.
அந்த வகையில் சசிகலா அங்கு சாமி கும்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரே புது பங்களா சசிகலாவுக்காக கட்டப்பட்டு வருவதால் அந்த கட்டுமானப் பணிகளையும் வெளியில் இருந்தபடி பார்வையிட்டார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தான் சசிகலா அவருடன் தங்கியிருந்தார். இப்போது அந்த வீட்டிற்கு எதிரே பெரிய பங்களா கட்டப்பட்டு வருவதால் இன்னும் சில மாதங்களில் அங்கு குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.