
வவுனியாவில் வெடிப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
வவுனியா - நெடுங்கேணி - சேனபிளவு பகுதியில் வெடிப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடமிருந்து டீ.என்.டீ ரக வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
32 வயதான குறித்த சந்தேகநபர் வடக்கில் கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
கைதானவர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வவுனியா - செட்டிக்குளம் - பெரியதம்பனை பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு தற்கொலை அங்கிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் குறித்த தற்கொலை அங்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவற்றில் ஒரு அங்கியில் இருந்து 400 கிராம் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வவுனியா காவல்துறையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த தற்கொலை அங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட இந்த தற்கொலை அங்கிகளை நீதிமன்ற உத்தரவின் பின்னர் செயலிழக்க செய்வதற்காக காவல்துறை விசேட அதிரடி படையினரின் உதவியை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.