
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை காரணமாக, நாட்டின் பல இடங்களில் மழையுடனான வானிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் புத்தளத்தில் இருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்ற நிலையில், இந்த பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடற்பயணங்களை மேற்கொள்வோர் அவதானமாக இருக்குமாறு அறிவறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவுகின்ற கடும் மழையுடனான காலநிலை காரணமாக, நீர்வடிகாலமைப்பு திணைக்களத்துக்கு உரிய 73 குளங்களின் நீர்மட்டம் 63 சதவீதம் உயர்வடைந்துள்ளது.
சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 100 சதவீதம் உயர்வடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பொலனறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் மஹம்பிடி பகுதியில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.