யாழில் தனியார் பேருந்தை போட்டி போட்டு முந்த முயன்ற அரச பேருந்து விபத்து
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று இரு பேருந்துகளும் பயணித்துள்ளன. மானிப்பாய் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பகுதியில், தனியார் பேருந்தை அரச பேருந்து முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளது.
இதன்போது, எதிரே வந்த மகிழுந்து (Car) ஒன்றிற்கு இடமளிக்க முற்பட்ட வேளையில், கட்டுப்பாட்டை இழந்த அரச பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற குறித்த பகுதியானது, வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்வதற்கு (Overtaking) உகந்த இடமல்ல எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
குறுகிய வீதி மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பேருந்துகள் இவ்வாறு போட்டியிட்டுச் சென்றதே விபத்துக்கு முக்கிய காரணமாகும்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.