புதிய கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது-உலக சுகாதார நிறுவனம் தகவல்

இங்கிலாந்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு விமானம், ரெயில் போக்குவரத்துகளை பல நாடுகளும் துண்டித்து உள்ளன.

இந்த வைரசின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றி இன்னும் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. அதன் தன்மைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கேபிரியேசஸ் கூறும்போது, வைரஸ் கிருமி உருமாற்றம் அடைவது என்பது இயற்கையானது.

இதுபோன்ற மாற்றங்கள் வரும் என்பது எதிர் பார்த்ததுதான். ஆனால் இதுபற்றி சரியான தகவல்கள் இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாதங்களை செய்கிறார்கள்.

இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள அறிக்கையில் இந்த வைரசின் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது என்றே கூறியுள்ளனர். ஆனால் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதுவரை எந்த மருத்துவ ஆதாரமும் தென்படவில்லை.

இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் தெளிவுபடுத்தும் என்று கூறினார்.

இங்கிலாந்து எடின்பர்க் ராயல் மருத்துவ கல்லூரி நிபுணர் டி.பி.ராஜேஷ் கூறும்போது, வைரசின் உருமாற்றம் என்பது அதன் வாழ்க்கை சக்கரத்தில் வழக்கமாக நடந்து கொண்டிருக்கும் ஒன்று.

வைரசில் உள்ள 1 அல்லது 2 புரோட்டீன் மூலக்கூறுகள் மாற்றங்கள் ஏற்படும்போது அந்த வைரஸ்கள் உருமாறி விடுகின்றன. அப்போது அதன் தன்மைகளும் மாறுகின்றன.

இந்த வைரசை பொறுத்த வரையில் தற்போது கொரோனாவுக்காக நடத்தப்பட்டு வரும் சாதாரண பி.சி.ஆர். பரிசோதனை முறையிலேயே கண்டுபிடிக்க முடிகிறது. அதாவது உமிழ்நீர், சளி போன்றவற்றை சோதனை செய்வதன் மூலம் கண்டு பிடித்து விடலாம்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் இதை கட்டுப்படுத்துமா என்பது போக போகத்தான் தெரியும். ஆரம்ப கட்டத்திலேயே ஒரு முடிவை சொல்லிவிட முடியாது.

ஒருவரது உடலில் தடுப்பூசிகளை செலுத்தியபிறகு அது நோய் எதிர்ப்பை உருவாக்கும். அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதன் அடிப்படையில்தான் இந்த வைரஸ் கட்டுக்குள் வருமா? என்பது தெரியவரும் என்று கூறினார்.

மற்றொரு இங்கிலாந்து மருத்துவ நிபுணர் வின்சண்ட் ராஜ்குமார் கூறும்போது, புதிய வைரசை தடுப்பூசி மருந்துகள் தடுக்க முடியுமா? என்பது வைரசின் உருமாற்றத்தை பொறுத்தே சொல்ல முடியும். வைரசில் உள்ள அமினோ ஆசிடின் மாற்றத்திற்கு தகுந்தமாதிரி புதிய தடுப்புமருந்துகள் வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அதை தடுக்க முடியும். அதே நேரத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலே நோய் பரவல் என்பது மிகவும் குறைந்துவிடும்.

எனவே நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறினார். மேலும் சில நிபுணர்கள் கூறும்போது, சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் பல இடங்களுக்கும் பரவி இதுவரை பல்லாயிரக் கணக்கான உருமாற்றங்களை செய்துள்ளன.

அவ்வாறு ஒவ்வொரு தடவையும் உருமாற்றம் செய்யும்போது, அதன் பாதிப்பு தன்மையில் மாற்றம் காணப்படுகிறது. இப்போது பரவி வரும் வைரசில் உள்ள புரோட்டீன்கள் மனிதனுடைய செல்களில் வேகமாக ஒட்டிக் கொள்கிறது.

இதன் காரணமாகத்தான் இதன் பாதிப்பு வேகம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் மட்டும் இதுவரை 1,108 முறை கொரோனா வைரசில் உருமாற்றம் ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்கு தற்போது நாம் பின்பற்றும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது போன்றவற்றை தொடருவதுதான் சிறந்த வழி என்று கூறினார்கள்.