கார் மீது கவிழ்ந்த மணல் லாரி... 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் இன்று அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற லாரியின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, ஒரு கார் மீது கவிழ்ந்தது. இதனால் அந்த கார் லாரியின் அடியில் சிக்கி சிதைந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

 

கார் டிரைவர் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.