மெக்சிகோவில் கோர விபத்து - கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறி 14 பேர் பலி

மெக்சிகோவில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் டேங்கர் லாரியின் டிரைவர் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள நயாரித் மாகாணத்தில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையில் திரவமாக்கப்பட்ட சமையல் கியாசை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி சாலையில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த சில வாகனங்களை மோதி விட்டு சாலையில் கவிழ்ந்தது. இதில் டேங்கரில் இருந்த திரவ கியாஸ் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. அதன் பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

 


இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் சிக்கி தீக்கிரையாகின. இந்த கோர விபத்தில் டேங்கர் லாரியின் டிரைவர் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.